திங்கள், 17 டிசம்பர், 2007

அம்மா-அப்பா....நீ-நான் -தபூ சங்கர்

உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா எனக்கு மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.
'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.
'ஏம்ப்பா..?'
'டேய்... நானும் இப்பிடித்தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா - அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே முடிவுசெய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வதென்று!
ச்சீ... போடா!
அந்தப் பூங்காவில் அமர்ந்திருந்த பெண்கள் எல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஆளுக்கொரு புல்லைப் பிடுங்கி, கொஞ்சம் கொஞ்சமாய்க் கிள்ளிப்போட்டபடியே தன் அருகில் இருக்கும் காதலனிடம் பேசிக்கொண்டு இருக்கையில்... நீ மட்டும் உன்னைச் சுற்றி முளைத்திருந்த புற்களை, உன் அழகிய கைகளால் மெல்ல வருடிவிட்டபடியே என்னுடன் பேசிக்கொண்டு இருந்தாய்.
உன் செய்கை உன் அழகை இன்னும் அழகாக்குவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
'என்ன' என்று கேட்ட உன்னிடம்... மற்ற பெண்களின் செயல்களையும், உன் செய்கையையும் சுட்டிக்காட்டினேன்.
உடனே நீ வருத்தம்கொண்டு, 'என்ன பெண்கள் இவர்கள்... புல்லைப் பிடுங்கிக் கிள்ளிக்கிள்ளிப் போட்டுக்கொண்டு... அது என்ன பாவம் செய்தது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்?' என்றாய் என்னிடம்.
'அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். ஏன் என்றால் அவர்கள் பெண்கள். நீ இப்படித்தான் செய்வாய். ஏன் என்றால் நீ தேவதை!' என்றேன்.
'ச்சீ போடா' என்று என் கன்னம் தட்டினாய்.
நீ 'நட்சத்திரம் விழாது' என்றாய்.
'உண்மைதான் ஒரு நட்சத்திரம் எப்படிப்பட்டது என்று இன்னொரு நட்சத்திரத்திற்குத்தானே' தெரியும் என்றேன்.
அதற்கும் உதிர்த்தாய் அற்புதமாய் ஒரு 'ச்சீ போடா.'
நீ உதிர்க்கும் 'ச்சீ போடா' என்கிற அந்த வார்த்தைக்காகத்தான் நான் தினமும் காத்திருக்கிறேன். ஏனென்றால் நீ ஒவ்வொரு முறை அப்படிச் சொல்லும்போதும் என் உயிரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகிறாய்.

கருத்துகள் இல்லை: