வெள்ளி, 16 நவம்பர், 2007

தொழில் கொள்கை

‘இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்’’ என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு தனது தொழில் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. 2011&ம் ஆண்டுவாக்கில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாகக் கூறியுள்ள அந்த அறிக்கை, தமிழ்நாட்டின் ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. தொழில் துறையினரும் மாநில நிர்வாகமும் கலந்து ஆலோ சித்து அவ்வப்போது கொள்கை முடிவுகளை எடுத்திட ஏதுவாக முதல்வர் தலைமையில் சிறப்புப்பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தொழில் கொள்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள தொழில் கொள்கை, தொழில்துறையின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்திய தொழில் நிலுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. இதை வரவேற்றிருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது பற்றிய அணுகுமுறை மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது, விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு முன்வரும் தனியார் நிறுவனத்தினர், நேரடியாக விவசாயிகளிடம் நிலங்களை வாங்கிக் கொள்ளவேண்டும். அவை பெரும்பாலும் தரிசு நிலங்களாகவோ, புன்செய் நிலங்களாகவோ இருப்பது நல்லது. தொழில் பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக வாங்கப்படும் நிலத்தில் பத்து சதவிகிதத்துக்கு மேல் நன்செய் நிலம் இருந்தால், அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ‘தொழில் கொள்கை’ திட்ட வட்டமாகக் கூறுகிறது.

பத்தாயிரம் ஏக்கர் கொண்ட ‘நிலவங்கி’ ஒன்றை ஏற்படுத்தவும் அந்த நிலங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய தொழில் பூங்காக் களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘சிப்காட்’ மற்றும் ‘டிட்கோ’ முதலிய அரசு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்படும் தொழில் பூங்காக்களில் பத்து சதவிகித இடம் பள்ளிகள், மருத்துவமனைகள்,


குடியிருப்புகள் முதலான சமூகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊக்கத் தொகைகளும், தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருவோருக்குச் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில் கொள்கையில் இடம் பெற்றுள்ள இரண்டு அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதத்தில் முக்கியமான சில சலுகைகளைத் தொழில் கொள்கையில் அறிவித்துள்ளனர். உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கினால், அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு நுழைவு வரியிலிருந்தும் மதிப்புக் கூட்டு வரியிலிருந்தும் முழுமை யாக விலக்கு அளிக்கப்படும்.

தனி நபர்களோ நிறுவனங்களோ தமது கண்டுபிடிப்புக் காகக் காப்புரிமை (Patent) பெறுவதற்கு ஆகும் செலவில் ஐம்பது சதவிகிதம் அல்லது இரண்டு லட்ச ரூபாய் இதில் எது குறைவோ அதனை அரசே ஏற்கும் என தொழில் கொள்கையில் கூறியுள்ளனர்.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண விவசாயிகள்கூட இப்போது பல்வேறு புதிய கண்டுபிடிப்பு களைச் செய்கின்றனர். மகராஷ்டிராவில் அப்படியரு விவசாயி கண்டுபிடித்த ஹெச்.எம்.டி. என்ற நெல் ரகம், இப்போது பல மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. அதற்கான காப்புரிமையை அவர் பெறாத காரணத்தால், அதனால் வரும் லாபத்தை இப்போது மற்றவர்கள் அனுபவிக்கின்றனர். காப்புரிமை பெறுவதற்கான தொகையில் சலுகை வழங்குவது நல்லதுதான். இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகளில் விவசாயத்துறை சார்ந்த வற்றுக்கும், பெரும்பாலான மக்களுக்குப் பயன்படக் கூடியவற்றுக்கும் காப்புரிமை பெறுவதற்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிப்பதால் ஏற்படும் இழப்பைவிட இதற்குக் கூடுதலாக செலவாகி விடாது. அதுமட்டுமின்றி, இத்தகைய கண்டுபிடிப்புகள் வணிகரீதியில் வெற்றி பெற்றால் அதனால் நமது மாநிலம்தான் லாபம் அடை யும். எனவே, தமிழக முதல்வர் இதனைப் பரிசீலிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்படும் எனத் தொழில் கொள் கையில் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆர்வமுள்ள மாணவர்களைத் தெரிவு செய்து தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்கச் செய்வது, அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக ரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்துவது எனக் குறிப்பான திட்டங்களை அரசு அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சிமென்ட் தொழிற்சாலைகள் ‘ஃப்ளை ஆஷை’ப் (திறீஹ் கிsலீ) பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தொழில் கொள்கையில் கூறியுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சிமென்ட் விலை ஏற்றத்தால் கட்டுமானத் தொழிலே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஃப்ளை ஆஷைப் பயன்படுத்தும் இந்த யோசனை முக்கியமானதாகும். ஆனால், இதுவும் பொத்தாம் பொதுவில்தான் கூறப்பட்டுள்ளது. அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் ஃப்ளை ஆஷ் பயன்பாட்டை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளைப் பல மாநில அரசுகள் எடுத்துள்ளன.

ஒரிசா மாநில அரசு தன் மாநிலத்தில் அனல் மின்நிலையம் உள்ள பகுதிகளில் எழுபது கிலோமீட்டர் சுற்றளவில் செங்கல் சூளைகளைத் தடை செய்துள்ளது. ஃப்ளை ஆஷைப் பயன்படுத்தித்தான் அங்கு கட்டுமானப் பயன்பாட்டுக்கான கற்களை உற்பத்தி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பொதுப்பணித் துறையால் கட்டப்படும் அனைத்து மேம்பாலங்களுக்கும் ஃப்ளை ஆஷால் தயாரிக்கப்படும் கற்களைத்தான் பயன் படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஃப்ளை ஆஷை இலவசமாக வழங்குகிறது. ஆனால், அதை வாங்குவதற்குத்தான் ஆளில்லை. மக்களிடம் இன்னும் செங்கல்லால் வீடுகட்ட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதால் ஃப்ளை ஆஷால் தயாரிக்கப் படும் கற்களை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, அதை ஊக்குவிக்க, ‘பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமான நடவடிக் கைகளிலும் ஃப்ளை ஆஷால் தயாரித்த கற்களையே பயன்படுத்த வேண்டும்’ எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது எண்ணூர், செய்யூர், கடலூர் எனப் பல்வேறு இடங்களில் புதிய அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. அந்தத் திட்டங்களை எதிர்க்கும் அந்தப் பகுதி பொதுமக்கள் ஃப்ளை ஆஷைப் போட்டுவைக்கும் சாம்பல் குழிகளால் தங்களுக்கு சுகாதாரக்கேடு வருமென அஞ்சுகிறார்கள். அவர்களது அச்சத்தைப் போக்கிட ஏதுவாக ஃப்ளை ஆஷை சேமித்து வைக்காமல், அதைக்கொண்டு கற்கள் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் சிலவற்றை அறிவிப்பதும் பயன்தரும்.

தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் உற்பத்தியாகிறது. அதில் ஐந்து சதவிகிதம்கூடப் பயன்படுத்தப்படவில்லை. அரசு கட்டித்தரும் தொகுப்பு வீடுகளுக்கு ஃப்ளை ஆஷ் கற்களைப் பயன்படுத்தினால், கட்டுமான செலவு நிச்சயம் குறையும். இப்போது சரியாக வேகாத செங்கற்களைக் கொண்டு மிகக் குறைவான சிமென்ட்டைப் பயன்படுத்திக் கட்டப்படுவதால் அந்தத் தொகுப்பு வீடுகள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே சரிந்து விடுகின்றன.

திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி குறித்துத் தொழில் கொள்கையில் நிறையவே கூறியுள்ளனர். இதற்காக மாநில அளவில் ‘மனித வள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புக் குழு’ அமைக்கப்பட்டு, அதன்மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டு மெனக் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நான் கோரிக்கை விடுத்தபோது, ‘தொழில் கொள்கையில் அது உள்ளடக்கப்படும்’ என முதல்வர் அறிவித்திருந்தார். அவர் கூறியபடியே அதற்கான திட்டம் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. உயர்நிலைப்பள்ளி மட்டத்திலேயே பாடத்திட்டத்தில் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுமென அறிவித்துள்ளனர். இதற்காக சி.ஐ.ஐ&யின் ஒத்துழைப்போடு விரி வான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுத் தமிழக அரசிடம் ஏற்கெனவே வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து சி.ஐ.ஐ. எதையும் குறிப்பிடவில்லை. தமிழக அரசு செலவு செய்து ஆட்களைப் பயிற்றுவித்துத் தந்தால் அவர்களிலிருந்து தமக்குத் தேவையானவர்களைத் தொழில் நிறுவனங்கள் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் என்பதாகவே அந்தத் திட்டம் உள்ளது. தொழில் நிறுவனங் களுக்கு எந்தப் பொறுப்பையும் அளிக்காமல் அரசாங்கத்துக்கு மாத்திரம் கடமைகளை வரையறுத்துள்ள அந்தத் திட்டத்தின் அணுகுமுறை சரியான தல்ல. அதை மாற்றி தொழில் நிறுவனங்களும் அரசும்சேர்ந்து அந்தத் திட் டத்தை செயல்படுத்தி னால், நிச்சய மாகப் பெரிய மாற் றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான குறிப்பான திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும்.

2011 ஆண்டுக்குள் இருபது லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அரசின் அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது எனத் தெரியவில்லை. வேலை வாய்ப் புகளை ‘ஒருங்கு திரட்டப் பட்ட பிரிவு’ (ளிக்ஷீரீணீஸீவீsமீபீ ஷிமீநீtஷீக்ஷீ) ‘ஒருங்கு திரட்டப்படாத பிரிவு’ (ஹிஸீ ளிக்ஷீரீணீஸீவீsமீபீ ஷிமீநீtஷீக்ஷீ) என இரண்டாகப் பிரித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் யாவும் ஒருங்கு திரட்டப்பட்ட பிரிவுக்குள்தான் வரும். தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தாறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 2005&2006&ம் ஆண்டில் சுமார் பதினாறாயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டது. கடந்த ஆட்சியில் இருந்த வேலை நியமனத்தடை ரத்து செய்யப்பட்டு, இப்போது பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. எனவே, கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் பேர் வரை வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை ஐம்பது லட்சம் பேர். இதை ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு மிகவும் சொற்பமானதுதான் என்பது புரியும். இந்தச் சூழலில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை அரசு எப்படி உருவாக்கப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறிதான்! ஒருங்கு திரட்டப்படாத விவசாயம் உள்ளிட்ட துறைகளையும் உள்ள டக்கித்தான் இந்த வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளதா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. தற்போது அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட அனைத்து வாரியங்களிலும் பதிவு செய்து கொண்டிருப்போரையும் கணக்கிட்டால்கூட இந்த இலக்கை எட்டுவதுகடினம்தான்.

தமிழ்நாட்டில் தற்போது துவக்கப்படுகின்ற பெரிய பெரிய திட்டங்களில்கூட நேரடியாக வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டுவதில்லை. எனவே, அரசின் இந்த அறிவிப்பு வெறும் கவர்ச்சி தானோ என்ற ஐயத்தை சில அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. இதைத் தெளிவுபடுத்த வேண் டியது அரசின் கடமை.

தொழில் துறையினரின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சேர்க்கப்படும் எனவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றவும் முன்வருகின்ற தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதலாக சலுகைகள் அளிக்கப்படும் என்றும் ‘தொழில் கொள்கை’ கூறுகிறது. இவை வரவேற்கக்கூடிய அம்சங்களாகும். ஆனால், இத்தகைய சலுகைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப்பின் இப்படி யான, அரசின் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட வேண்டும்.

தொழில் தொடங்குவதற்காக முன்வரும் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவற்றுக்கும், அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிப் பதற்குத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இடமில்லையென்ற நிலை உருவாகிவிடும். அந்த நிலைமை வராமல் காக்கவேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை தமிழினத் தலைவரான முதல்வர் கலைஞருக்கு உள்ளது!

நன்றி :ஜு.வி

கருத்துகள் இல்லை: