ஞாயிறு, 29 ஜூலை, 2007

ஆனந்தவிகடனில் - ஆர்குட்

பெயர்: ஆர்குட்

வயது: மூன்று

என்னைப் பற்றி: கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ‘ஆர்குட் புயுக்கோக்டென்’ ஜஸ்ட் ஜாலியாக என்னைக் கண்டு பிடித்தார்! இன்று எனக்கு உலகம் முழுவதும் 49 மில்லியன் நண்பர்கள்! உலகளவில் அதிகமாகப் பயன்படும் வலைத்தளங்களில் எட்டாவது இடம் எனக்கு. எல்லோரும் என்னில் இலவசமாக உலவலாம்... உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடிக்கலாம்!

மதம்: எம்மதமும் சம்மதம்!

மொழி: எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளும்!

இங்கே எதற்காக: நட்பு, அரட்டை, கடலை, காமம், காமெடி, செய்தி, பாராட்டு, திட்டு என எதற்காகவும்...


முதலில் ப்ளஸ்கள்!
எந்தக் கண்டத்தில் இருந்தாலும், ஆர்குட்டில் இருந்தால் ஒற்றைப் பெயரை வைத்துக்கொண்டு விட்டுப்போன நண்பனைத் தேடிப் பிடிக்க முடிவது முக்கியமான ப்ளஸ். நம்மைப் போலவே எண்ணங்கள் கொண்டவர்களுடன் புதிதாக நட்புகொள்ள முடிவது இரண்டாவது நன்மை!

சரி, மைனஸ்கள்..?

நம் ஆர்குட் ஆல்பத்தில் நாம் போட்டு வைத்திருக்கும் புகைப்படங்களை எவர் வேண்டுமானாலும் ‘டவுன்லோட்’ செய்து, அதைக்கொண்டு கிராஃபிக்ஸ் செய்து, சும்மா புகுந்து விளையாடலாம். நமக்கே தெரியாமல் நமது பெயரையும், புகைப்படங்களையும், விவரங்களையும் வைத்துக்கொண்டு அக்கவுன்ட் ஆரம்பித்து, சேட்டை பண்ணலாம். ஏன்... நம் அக்கவுன்ட்டையே ‘ஹேக்’ (கடத்தி!) செய்து, நமது நண்பர்களுக்கு ஆபாசமான, விபரீதமான செய்திகளை அனுப்பலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் நட்பின் ஆழத்தையும் மூன்றாவது நபரால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த நட்பு வெப்சைட் புண்ணியத்தால் பல முன்னாள் காதல்கள் (திருமணமான பின்னரும்கூட) ஆங்காங்கே மீண்டும் சேர (சோர?) ஆரம்பித்திருக்கின்றன. இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் தேசப் பாதுகாப்பையும், கலாசாரப் பாதுகாப்பையும் காரணம் காட்டி ஆர்குட்டைத் தடை செய்திருக்கிறார்கள்.

தகவல் கடலாக விரிந்துகிடக்கும் ஆர்குட்டில், ‘ஏன் பூமியின் வெப்ப நிலை உயர்ந்துகொண்டே இருக் கிறது?’ என்று நிபுணர் கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதும், ‘பக்கார்டிக்கு எது பங்காளி பெஸ்ட் மிக்ஸிங்?’ என்று குடிமகன் கருத்தை அறிந்துகொள்வதும் அவரவர் இஷ்டம்!


மொத்தத்தில், ஆர்குட் கைப்பிடி இல்லாத கத்தி! பார்த்து, பத்திரமா, பாதுகாப்பா பயன்படுத்திக்கோங்க!- -

நன்றி : ஆனந்தவிகடன்

திங்கள், 16 ஜூலை, 2007

கதம்பம் 16 - July - 2007

வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியாய் இருப்பது. நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ வைப்பது. உலகம் முழுவதையுமே புன்னகைப் பூக்களால் நிரப்புவது."

இன்று படிப்பு ஒரு பதட்டம்.

தேர்வு ஒரு பதட்டம்.

பள்ளிக்குச் செல்லுதல் ஒரு பதட்டம்.

மதிப்பெண்கள் வரும்போது மனம் எல்லாம் நடுக்கம்.

….

எதிலும் பதட்டம் எங்கும் பதட்டம்….

நாம் ஒவ்வொரு நிமிடமும் பதட்டத்துடனே அமர்ந்து இருக்கிறோம். திட்டமிட்டு வாழ்ந்தால் குழப்பமும் இல்லை. நடுக்கமும் இல்லை.

நகைச்சுவை என்பது பதட்டத்தைக் குறைக்கும். அது உற்சாகத்தை அதிகப்படுத்தும். தினமும் சிரிக்கத் தகுந்த செய்திகளை நாம் வாசிக்க வேண்டும். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு நிமிடம் சிரிப்பது ஒரு மணிநேர உடற்பயிற்சிக்குச் சமம். சிரிப்பது மூளையை இலகுவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளை முறுக்கேற்றும். காற்று போல் உடலைக் கனமிழக்கச் செய்யும். நுண்ணறிவைச் செம்மையாக்க சிரிப்பது ஓர் உபாயம்.

மகத்தான மனிதர்கள் எல்லோருமே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தவர்கள் தான்.

ஹென்றி வார்ட் பீச்சர் என்கிற பேச் சாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு துண்டுக் காகிதம் அவரைத் தேடி வந்தது. அதில் ‘முட்டாள்’ என்று எழுதியிருந்தது. உடனே பீச்சர், ‘‘யாரோ தன் பெயரை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று அறிவித்தார்.

புத்திக்கூர்மை உள்ளவர்கள் வசவுகளைக்கூட வாழ்த்து களாக மாற்றிக் கொள்வார்கள்.

பெர்னாட்ஷாவும், செஸ்டர் டன்னும் நெருங்கிய நண்பர்கள். செஸ்டர்டன் பருமனானவர். ஷா ஒல்லியானவர். இருவரும் ஒரு முறை தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தனர். அப்போது செஸ்டர்டன் ‘‘உங்களைப் பார்ப்பவர்கள் நம் நாட்டில் ஏதோ பஞ்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்’’ என்று ஷாவிடம் சொன்னார். அதற்கு, ‘‘உங்களைப் பார்த்ததும் அதற்கு யார் காரணம் என்று கண்டுகொள்வார்கள்’’ என்று மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தார் ஷா.

நகைச்சுவை உணர்வு கசப்பைப் போக்கிக் களைப்பை நீக்கி புத்துணர்வு தரும். இன்று முதல், தினம் ஒரு நகைச்சுவையைப் படித்துப் பகிர்ந்து பலனடைவோம்.

நன்றி : சுட்டி விகடன் , வெ.இறையன்பு I.A.S

ஞாயிறு, 1 ஜூலை, 2007

உயில் என்றால்.....


உயில் என்றால் என்ன?
ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!

உயில் --- கட்டாயம் என்ன ?
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.

‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.

உயில் - எப்படி எழுதுவது?

‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’

உதாரணமாக
எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
----
‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.

உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.

உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.

• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.

• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.

உயில்கள் பலவிதம்!

குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.

உயில் எப்போது செல்லாமல் போகும்?

குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

சில டெக்னிக்கலான வார்த்தைகள்!

Will உயில் (விருப்ப ஆவணம்)

Testator உயில் எழுதியவர்

Executor உயில் அமல்படுத்துநர்

Codicil இணைப்புத் தாள்கள்

Attested சரிபார்க்கப்பட்டது.

Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.

Beneficiary, Legatee வாரிசு

Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்

Succession Certificate வாரிசு சான்றிதழ்

Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்

Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்

Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம்

Witness சாட்சி

‘ஆன் லைன்’ உயில்

உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.



நன்றி : நாணயவிகடன்.