வெள்ளி, 21 டிசம்பர், 2007

அழகி வைத்த பொட்டு ! - தபூ சங்கர்

'உன் அக்கா குழந்தைக்குக் கன்னத்தில் நீ வைத்துவிட்ட தேவதைப் பொட்டு அழகாக இருக்கிறது' என்றேன்.

'அய்யோ அது திருஷ்டிப் பொட்டு' என்றாய் வேகமாக நீ.

'என்னது திருஷ்டிப் பொட்டா. பொய் சொல்லாதே. ஒரு தேவதை வைக்கும் பொட்டு எப்படி திருஷ்டிப் பொட்டாகும். அது தேவதைப் பொட்டுத்தான்.'

'சும்மா சும்மா என்னைத் தேவதை தேவதை என்று சொல்லி, என் மேல் கண் வைக்காதே' என்றாய் நாணிக்கொண்டே.

'நான் கண் வைப்பதா. நீதான் என் கண்களை எப்போதோ பறித்துக் கொண்டாயே.'

'அப்போ உன் முகத்துல முழிச்சிக்கிட்டு ரெண்டு இருக்கே... அது என்ன' என்றாய்.

'அது நீ என் இதயத்துக்குள் போவதற்காக நான் வைத்திருக்கும் வாசல்!'

'நான் எது கேட்டாலும் உடனே நீ அதுக்கொரு பதில் சொல்கிறாயே... போன ஜென்மத்தில் நீ பெரிய ஞானியாக இருந்திருப்பாயோ?''

'எனக்கு போன ஜென்மம் முடியும்போது, காதலிடம் போய், 'இவளைக் காதலிக்க ஒரு ஜென்மம் போதவில்லை' என்று முறையிட்டிருப்பேன். உடனே 'சரி, இன்னொரு ஜென்மம் தருகிறேன். அதிலும் நீ இவளையே காதலி' என்று எனக்கு இந்த ஜென்மத்தைக் கொடுத்திருக்கும் காதல்.'

'அப்படியா... இந்த ஜென்மமும் முடியும்போது, காதல் உன்னிடம் வந்து, 'இவளைக் காதலித்தது போதுமா?' என்று கேட்டால், நீ என்ன சொல்வாய்?'

'நமக்கு இந்த ஜென்மக் கணக்கெல்லாம் சரிப்பட்டு வராது. ஆகையால், 'காதலே நீ, இந்த மண்ணில் எத்தனை காலம் இருப்பாயோ, அத்தனை காலமும் நானும் இருந்து இவளையே காதலிக்கும்படி எனக்கொரு வரம் கொடு!' என்று கேட்பேன்.'

'காதல் கொடுக்குமா?' என்றாய்.

'கொடுக்கும். ஏன் என்றால் அது காதல்!'

தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை தொகுப்பில் இருந்து.

வியாழன், 20 டிசம்பர், 2007

முதுமை

குறிப்பு :
திரு. அ : மாமுசு எதுக்கு இதெல்லாம் , கட்டுரை தலைப்பு ரொம்ப புல்லரிக்குதே !
திரு ஆ : என்ன பண்ண ராச ,
நம்ம அம்மா அப்பா வ புரிச்சிக்க , பிறகு,
நாமும் ஒரு நாள் இந்த பஸ்டாப்புக்கு(முதுமை) வரத்தாபோறம் , அதனால அந்த மனநிலை எப்படி இருக்குமுனு தெரிச்சிக்க வேண்டாமா !
''எனக்கு வயதாகிவிட்டது. இப்பல்லாம் யாருக்கும் நான் வேண்டாதவனாகி விட்டேன்'' என்று உள்ளுக்குள் ஊமைப்புலம்பல்களில் எண்ணற்ற ஆண்கள். முதுமை என்பது ஆரம்பத்தின் முடிவு அல்லது முடிவின் ஆரம்பம். மனிதனின் சார்புநிலை உண்மையாயிருந்தாலும் இளமையில் தணித்து இயங்க ஒரு சிறு முயற்சியாவது இருந்திருக்கும். முதுமையோ நம்பிக்கைகளின் இலையுதிர்காலம்.
''வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே
வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல்
மொழிந்து துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சு உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து சுணையும் அழிந்து''
_ என பட்டினத்துப் பிள்ளையார் பாடல் மிக அழகாக முதுமையை விளக்குகிறது.
65 வயதிருக்கும் அவருக்கு. பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார். எல்லோரையும் நன்றாகப் படிக்கவும் வைத்தார். அவரிடம் மாறாத பழக்கம் ஒன்று இருந்தது. வாங்கும் நியூஸ் பேப்பராகட்டும், அணியும் பனியனாகட்டும், பற்பசையாகட்டும் எப்போதும் ஒரே 'ப்ராண்ட்'தான் வாங்குவார். ஒரு குறிப்பிட்ட பேப்பரைக் காலையில் காஃபியுடன் படித்தால்தான் அவருக்கு நிம்மதி. துணைவி இருந்தவரை எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரின் மனைவி இறந்ததால், தற்போது மூத்த பிள்ளையோடு இருக்கிறார்.
பிள்ளைக்கு வேறொரு நியூஸ் பேப்பர் பிடிக்கும். ஒரே வீட்டில் இரண்டு நியூஸ் பேப்பர் வேண்டாம் என்று, இவருக்குப் பிடித்த நியூஸ் பேப்பரை நிறுத்திவிட்டார்கள். அதிலிருந்து கொஞ்சம் வருத்தத்திற்குள்ளாகிவிட்டார்.
மேலே கூறப்பட்டது சின்ன விஷயம்தான். ஆனால் வயதான காலத்தில் சிறு விஷயங்கள்கூட 'மைக்ரோஸ்கோப்' மூலமாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண நிகழ்வுகளின் மாறுதல்கள் கூட அதிக அளவில் பாதிக்கின்றன.
முதுமையில்தான் உடல்நோய்களின் அணிவகுப்பு கொஞ்சம் அதிகமாகவே அணிவகுக்க ஆரம்பிக்கும். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, இவற்றைத்தவிர ஐம்புலன்களின் செயல்பாட்டில் மெல்ல மெல்ல குறைபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். காது கேட்காத நிலையில் மகனும் மருமகளும் சிரித்துப் பேசினால்கூட, தன்னைப் பற்றி ஏதேனும் கேலி பேசுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படும். வீட்டில் தனக்குப் பிடிக்காத விஷயங்கள் நிகழும்போது, அந்த சந்தேகங்கள் இறுகிப்போக வாய்ப்பிருக்கிறது.
பார்வைக் குறைபாடுகள் சார்பு நிலையை அதிகரிக்கும். உடல் நலக்குறைவால் வெளியில் செல்லமுடியாத போது வீட்டில் உள்ளவர்கள் தன்னுடன் அதிகநேரம் செலவிடவேண்டும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மேலோங்கும்.
ஓர் ஆணின் வாழ்வில் இரண்டு சுற்றுகள் இருக்கின்றன. இரண்டு சுற்றுகளில் ஆணின் கூட வருபவர்கள் இரண்டு பெண்கள். முதல் சுற்றில் பிறப்பு முதல் திருமணம் ஆகும்வரை ஓர் ஆணை, தாய் கவனித்துக் கொள்கிறார். அடுத்த சுற்றில் திருமணத்திற்குப் பிறகு மனைவி கூட வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் ஓர் ஆணின் மனோபாவத்தை நன்கு அறிந்தவர்கள். தாய் பெற்றதால் வளர்த்துத் தெரிந்தவர். மனைவி உடன் வாழ்ந்ததால் கற்றவர். தாய் வளரும் பருவத்தில் ஓர் ஆணின் மாறும் குணங்களை நன்கு தெரிந்தவர். ஆனால் மனைவியோ (கல்யாணம் முதல் கடைசி வரை இருப்பதால்) அந்த ஆணின் மாறாத குணங்களை நன்கு புரிந்து வைத்திருப்பவர். அவருடைய கோபதாபங்கள், சென்சிட்டிவ்வான விஷயங்கள் இவையெல்லாம் அவருக்கு அத்துப்படி.
''சரி, சரி இவர் இப்படித்தான்'' என்று மனைவியின் சலிப்பு வசனங்களில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு பெண் ஓர் ஆணைவிட அதிக அளவில் உடலியல் ரசாயன ரீதியாகவும், வாழ்வியல் நிகழ்வு ரீதியாகவும் அதிக அளவு பிரச்னைக்குள்ளாகிறாள்.
அனுபவங்களை வாழ்க்கையை நடத்திச் செல்வதால், முதுமைக் காலத்தில் பெண்களுக்கு பிரச்னைகளை எதிர்கொள்வதில் சங்கடம் அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால், ஆணுக்கு வயதான காலத்தில் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது பயமும் பதட்டமும் ஏற்படுகிறது. மனைவி ரூபத்தில் 'சுமை தாங்கி' இல்லாதபோது, அடுத்தவர்கள் மேல் கோபம் ஏற்படுகிறது. மனைவி இருக்கும்போது அவர் 'இடி தாங்கியாய்' சமாளித்துக் கொள்கிறார். மனைவி இல்லாதபோது மற்றவர்களின் திசையை நோக்கிப் புயல்.
மகன் மேல் அல்லது மருமகள் மேல் கோபத்தைக் காண்பிக்க முடியாதபோது, தன்மேலேயே கோபம் ஏற்படுகிறது. ஊமைக்காயங்களால் மன வருத்தம் ஏற்படுகிறது. பென்ஷனாக வரும் பணம் ஓர் ஆணின் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், முந்தைய காலங்களில் சரிவர திட்டமிடாமலிருந்தால், நோய்வாய்ப்படும் போது மகனையோ, மகளையோ சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது...
எனக்கு நேற்று என் செல்ஃபோனில் ஒரு மெசேஜ் வந்தது. 'வாழ்வின் பெரும்பகுதியை உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டு சம்பாதிக்கிறோம். பின், பணத்தின் பெரும் பகுதியைச் செலவழித்துக்கொண்டு வாழ்வின் சிறுபகுதியில் உடல்நலத்தைக் கண்காணிக்கிறோம். விளையாட்டான இந்தச் செய்தியின் பின்பகுதியில் ஓர் உண்மை இருக்கிறது. முதுமையில் வரும் நோய்கள் எல்லாம் 'காம்ப்ளிகேடட்' வகையானவை. சிகிச்சை எடுப்பதற்குள் சிலர் லட்சாதிபதியாகிவிடுவார்கள். (முன்பு கோடீஸ்வரர்களாய் இருந்தவர்கள்) மருத்துவர் என்ற முறையில் ஒரு கஷ்டமான உண்மையைச் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. (மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் தவிர்த்து) இந்த உலகம் ஒரு லெவலுக்கு மேல் செலவு செய்யத் தயாராயிருக்கிறது. மற்றவர்களைப் பொறுத்தமட்டில் முக்கியமாக வயதானவர்களின் விஷயத்தில் ''முடிஞ்ச அளவுக்குப் பாருங்க டாக்டர், அப்புறம் ஆண்டவன் விட்டவழி'' என்று சமாதானமாகி விடுகின்றனர். ஆகவே, மருத்துவச் செயல்களுக்காகவாவது 'இளமையில் சேமி _ முதுமையில் செலவழிக்க' என்பது இவர்களின் சித்தாந்தமாக இருக்கவேண்டும்.
முதுமையில் தனித்திருக்கும் நேரங்கள் அசைபோடுதலில் முடியும். வருத்தம் மெல்ல எட்டிப்பார்க்கும். கடைசிவரை கூடவருவது நம் ரசனைகள்தான். சிறு ஆசைகள் மற்றும் சிறு எதிர்பார்ப்புகளுக்கு என்றுமே சேதாரம் வராது.
நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்கவும் தெரியும் முதுமையில். மறதி நோய் பொதுவாக அறுபதுகளின் தொடக்கத்தில் ஆரம்பமாகும். பழகிய இடங்களும், பழகிய விஷயங்களும் மறக்கும். வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விடுகிறார். பக்கத்துத் தெருவோ அல்லது தூரத்திலிருக்கும் மெயின் ரோடோ அங்கு போய்விடுகிறார். திரும்பி வரத் தெரிவதில்லை. தினமும் இவருக்கு ஒருத்தரை காவல் போடவேண்டியதிருக்கிறது' என்று உறவினர்கள் கூறுவர். நினைவுகளின் தொடர்ச்சியில் இடைவெளிகள் ஏற்பட்டு மறதி மட்டுமல்ல, சந்தேகப் பிரச்னைகளும் அதிகரிக்கும். உணர்ச்சிகளின் இடப்பெயர்ச்சியில் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்தல், திடீரென அழுதல் இவையெல்லாம் தோன்றும். பத்திரிகை படித்தல், குறுக்கெழுத்துப் புதிர், பாட்டுக் கேட்டல், கார்டனிங் இவைகளுக்கெல்லாம் மருந்துகளோடு கொஞ்சம் வேதனையைக் குறைக்கும்.
அறுபது வயது பெரியவர் ஒருவர் மிகுந்த வருத்தத்தில் வந்தார். விசாரித்ததில் தன்னுடைய சொத்து அனைத்தையும் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார். அதற்குப்பிறகு அவரை யாருமே கண்டு கொள்வதில்லை. சின்னச் சின்ன செலவுகளுக்குக்கூட பிள்ளைகளிடம் கையேந்தும் நிலைமை. தன்னுடைய இயலாமையால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகிவிட்டார்.
''என் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்காமலிருந்தால், நான் இந்த நிலைக்கு ஆளாகாமல் இருந்திருப்பேன்'' என்று புலம்பினார். அந்தப் புலம்பலிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
முடிவாக,
இளமையில் கல்வி முதுமையில் கொஞ்சம் சேமிப்பு. இவையெல்லாம் ஓர் ஆணின் நல்மனவாழ்வுக்கு வழி.
நன்றி : குமுதம் - ஹல்த்

புதன், 19 டிசம்பர், 2007

தற்கொலை !



மரணம் சோகமானது; அதனினும் தற்கொலை மிகவும் சோகமானது. சோகத்தின் உச்சகட்டம் என்றே கூறலாம். இந்தத் தற்கொலை சமாச்சாரங்களெல்லாம் மனித வரலாறு ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. காரணங்கள் பல்வேறு தரப்பட்டவையாக இருக்கலாம். காதல் தோல்வி, கடன் பிரச்னை, மனசு மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நோய்க் கொடுமைகள். ஏன் சமயங்களில் பரீட்சையில் தோல்வி போன்ற விசித்திரங்களும் தற்கொலைக்குக் காரணமாவதை நாம் பார்க்கிறோம். கேட்கிறோம்.

Self Murder என்ற அர்த்தமுள்ள லத்தீன் மொழி வார்த்தையே Sucide என்பது. எப்படித்தான் துணிந்தார்களோ; எப்போது முடிவெடுத்திருப்பார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை தைரியம்(?) இது போன்ற நாமெல்லாம் ஒரு சில நிகழ்வுகளைப் பார்த்து அவ்வப்போது யோசிப்பதில்லையா? விஷயம் என்னவென்றால், செத்துப் போகலாம் என்ற முடிவை சம்பந்தப்பட்டவர்கள் ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே எடுத்திருப்பார்கள். மெல்லமனதில் அசை போட்டவாறே (?) தகுந்த சந்தர்ப்பத்துக்காகவோ அல்லது வேறெதற்காகவோ காத்திருப்பா£கள். ஆனால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். வேறு சிலரோ கண நேர முடிவு என்பார்களே அது போல... திடீரென்று ஓர் இக்கட்டான, உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் ஒரு வீனீஜீuறீsமீ ஏற்பட்டு சடாரென முடிவெடுத்து 'முடித்துக்கொள்வார்கள்'.

தற்கொலை என்ற 'ரிஸ்க்'கான விஷயத்துக்குப் போகும் காரணிகள் என்னென்ன? எத்தனையோ பேருக்கு சொல்லமுடியாதத் துயரங்களும், தோல்விகளும், இழப்புகளும் ஏற்பட்டாலும் கூட, ஏன் ஒரு சிலர் மட்டுமே இந்த அபாயகரமான முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்? வாருங்கள்... பார்ப்போம்.!

பாலினம்

தற்கொலை பண்ணிச் சாவதில் பெண்களை மிஞ்சுவது... பாவம், ஆண்களே. ஆச்சர்யம், ஆனால் வழக்கம் போல உண்மைதான். ஆண்மகன் தற்கொலை பண்ணிக்கொள்வதென்பது பெண்களைவிட நான்கு மடங்கு அதிகம். ஆனால், அதே சமயம், 'தற்கொலை பண்ணிக்கொள்கிறேன் பேர்வழி' என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களில் பெண்களே அதிகம்! அதுவும் நான்கு மடங்கு அதிகம்.

வயது

பொதுவாக, வயது ஏற ஏற தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. ஆனால், சமீபகாலமாக இளம் வயது தற்கொலையாளிகளின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக்கொண்டே வருகிறது. (குறிப்பாக 15 முதல் 24 வரை வயதுடையவர்களின் எண்ணிக்கை) மிகுந்த கவலையளிப்பதான சமாச்சாரம் இது.

திருமண பந்தம்

யெஸ்... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுபவை மட்டுமல்ல. தற்கொலையைத் தடுக்கவல்ல வல்லமை வாய்ந்தவைகள் என்கிறது ஆய்வுகள். மனைவி, குழந்தைகள் என வாழ்க்கைக் கடலில் நீந்திக் கொண்டிருப்பவர்கள் நிரந்தரமாக. நீந்திக்கொண்டே இருப்பதற்காகக் கடலை நோக்கிப் போவது குறைவுதான். தனிமை, வேலையின்மை, திருமணம் ஆகாமல் இருத்தல் அல்லது திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்திருந்தால், கூடவே குடிப்பழக்கமும் சேர்ந்திருந்தால், அந்த மாதிரி நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 'ரிஸ்க்' மிக அதிகமே!

கல்வியும், தொழிலும்

அதிகம் படித்தவர்களிடத்திலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள் தான் முன்பு தற்கொலை பண்ணிக் கொண்டார்கள். தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதிகம் படித்தவர்களோ அல்லது படிப்பறிவே இல்லாதவர்களோ தற்கொலை 'ரிக்ஸ்'கில் எந்த வித்தியாசமும் இல்லை. வேலை இல்லாமல் இருத்தலும் தற்கொலையை மறைமுகமாக ஊக்கப்படுத்தும் ஒரு காரணமே.

தற்கொலை முறை

(ஹ§ம்.. இது வேறு என்கிறீர்களா?) பல முறைகள் இருந்தாலும் தூக்கில் தொங்கி உயிர் விடுவதே உலகம் முழுவதும் பரவலான தற்கொலை முறையாக உள்ளது. துப்பாக்கிகள், மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், கார்பன் மோனாக்ஸைடு பாய்சனிங் மூலம் சாவது இப்படிப் பல முறைகள் உலகெங்கும்!

சமூக ரீதியான, குடும்ப ரீதியான காரணங்கள் என எப்படி இருந்தாலும் மனநோய் மற்றும் உடல் நோய் ஆகிய இந்த இரண்டு விஷயங்களுமே தற்கொலைக்கான முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

யெஸ்... பெரும்பாலான தற்கொலைகளை ஆய்வு செய்து பார்த்ததில், அந்த நபர்கள் உடல் உபாதைகளை, சொல்ல முடியாத அளவில் அனுபவித்து இருப்பது தெரிய வந்தது. இன்னும் சொல்லப்போனால், செத்துப் போனவர்களில் 32 சதவிகிதம் பேர் கடந்த ஆறு மாத காலத்தில் ஏதோ ஒரு முக்கியமான உடல் கோளாறுகளுக்காக மருத்துவரைச் சந்தித்து இருக்கிறார்கள். உதாரணமாக, 'தனக்கு அபாயகரமான புற்று நோய் இருக்கிறது' என்று தெரியவந்த ஒரு வருடத்துக்கு ஐம்பது சதவிகிதம் பேர் தற்கொலை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பிட்ட சில நோய்களால் தாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தற்கொலைக்கான சாத்தியக் கூறுகள் அதிகமே என்கிறது ஆய்வு. உதாரணமாக, ஜீரண மண்டல வியாதிகள் என்று எடுத்துக் கொண்டால் அல்சர் (ஆச்சரியம்... ஆனால் உண்மை) ஈரல் நோய். சின்ன சமாச்சாரமாகத் தான் இருக்கும், ஆனால் இம்சை அதிகமாகக் கொடுக்கும். அந்த வகையில் ஒன்றுதான் குடல்புண் அல்லது பெப்டிக் அல்சர்!

மூளை நரம்பியல் மண்டலத்தை எடுத்துக் கொண்டால், வலிப்பு நோய், தலையில் அடி படுதல், மூளை மழுங்குதல் மற்றும் எய்ட்ஸ் நோயால் அவதியுறும்போது ஏற்படும் மூளை பாதிப்புகள்.. இவையெல்லாம் தற்கொலையில் முடியும் 'ரிஸ்க்' அதிகமே!

மனநலக் கோளாறுகள் காரணமாகத் தற்கொலை

உடல் நோய்களின் காரணமாகத் தற்கொலை ஒரு புறமென்றால், மனநோய் பாதிப்புகளால் தங்களை மாய்த்துக் கொள்பவர்கள் எத்தனையோ பேர்! சரியாகச் சொன்னால் தற்கொலை பண்ணிக் கொண்டவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு ஏதேனும் ஒரு வகையில் மனக்கோளாறு இருந்தே இருக்கிறது. அதிலும் மனச்சோர்வு நோயே பிரதானம் (80%) மனச்சிதைவு நோய் (schizophoenia இது ஒரு 10%) மற்றும் வயதாவதால் ஏற்படும் மூளை மழுங்கிப் போதல் (Dementia) இது ஒரு 5% இப்படிப் போகிறது லிஸ்ட்.

எல்லாவற்றையும் பிரித்தறியும் மருத்துவம் தற்கொலைகளையும் மூன்றாகப் பிரிக்கிறது. (Durkheim's Theory)

  • ஒன்று Egoistic தற்கொலைகள். சமூகத்தின் எந்தப் பிரிவுடனும் ஒட்டுறவில்லாத வாழ்க்கை வாழும் நபர்கள் சந்திக்கும் தற்கொலை இந்த விதம். உதாரணமாக, கிராமப் புறங்களில் பார்த்தால் கிராமமே ஒரு குடும்பமாக வாழும் முறை இன்னமும் இருக்கிறது. பக்கத்து ப்ளாட்காரர் என்ன நிறம்? என்ன பேர்? என்று தெரியாத நிலை நகரங்களில் இருக்கிறது. ஆக, நல்ல இணக்கமான உணவு முறைகள் தற்கொலை எண்ணத்துக்கு எதிரியே!

  • இரண்டாவது attruistic என்பது போரில் உயிர் துறக்கும் அல்லது தன் கொள்கையை, கூட்டத்தைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் தன் போர்ப்படைத் தலைவனுக்காக, கொண்ட கொள்கையில் தோராயமாகத் தோல்வி வரும் பட்சத்தில் அதைச் சந்திக்க வேண்டாமென்று அதனினும் மாற்றாக தற்கொலையை ஒரு வீரன் தேர்ந்தெடுத்தால், அது தான் இந்த வகை. மற்றொரு வகையில் சொன்னால், ஒரு 'குரூப்'புடன் ஏற்பட்ட அதிகப்படியான ஒருங்கிணைப்பை இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

  • மூன்றாவது amonia வகை. அதாவது, பொருளாதார ரீதியாகப் பெருத்த நஷ்டமடைந்த பெரும் செல்வந்தர் எப்படி நினைப்பார்? 'தன்னை இந்தச் சமுதாயம் முன்பு போல் பார்க்காதே... முன்பு போல் தன்னால் இந்தச் சமுதாயத்தோடு பின்னிப் பிணைய முடியாதே... அவ்வளவுதான் என் மரியாதை! என்ற ரீதியில் யோசித்து ''கிளம்பி'' விடுவார். ஒரு சமுதாயத்துடனான தன்னுடைய இணக்கம் உடைந்து, சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக கற்பித்துக் கொள்பவர்களின் முடிவு இந்த வகை. தற்கொலையின் வகைகள் இப்படி இருந்தாலும், தற்கொலை பண்ணிக் கொள்வதன் தெளிவான Motive என்ன? அவர்களின் எண்ணம் எப்படி இருந்திருக்கும்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? அவர்கள் சொல்லும் 'மெசேஜ்' என்ன? இது குறித்தும் மன நல மாமேதைகள் ஆய்ந்து வந்திருக்கின்றனர்.
குறிப்பு : மனசில் இருக்கிறது இறக்கிவையுங்க அப்பு , என்னத பெரிசா கொண்டுப்போகப் போறோம். வாழுவோம் வாழவைப்போம்.

செவ்வாய், 18 டிசம்பர், 2007

இனிமேல் எனக்குப்  பரிசு  தராதே! - தபூ சங்கர்


'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்தப் பரிசும் நீ தராதே!' என்றேன்.
கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.
'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ளமுடியும், சொல்.
எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'

தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை தொகுப்பில் இருந்து.

திங்கள், 17 டிசம்பர், 2007

அம்மா-அப்பா....நீ-நான் -தபூ சங்கர்

உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா எனக்கு மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.
'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.
'ஏம்ப்பா..?'
'டேய்... நானும் இப்பிடித்தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா - அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே முடிவுசெய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வதென்று!
ச்சீ... போடா!
அந்தப் பூங்காவில் அமர்ந்திருந்த பெண்கள் எல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஆளுக்கொரு புல்லைப் பிடுங்கி, கொஞ்சம் கொஞ்சமாய்க் கிள்ளிப்போட்டபடியே தன் அருகில் இருக்கும் காதலனிடம் பேசிக்கொண்டு இருக்கையில்... நீ மட்டும் உன்னைச் சுற்றி முளைத்திருந்த புற்களை, உன் அழகிய கைகளால் மெல்ல வருடிவிட்டபடியே என்னுடன் பேசிக்கொண்டு இருந்தாய்.
உன் செய்கை உன் அழகை இன்னும் அழகாக்குவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
'என்ன' என்று கேட்ட உன்னிடம்... மற்ற பெண்களின் செயல்களையும், உன் செய்கையையும் சுட்டிக்காட்டினேன்.
உடனே நீ வருத்தம்கொண்டு, 'என்ன பெண்கள் இவர்கள்... புல்லைப் பிடுங்கிக் கிள்ளிக்கிள்ளிப் போட்டுக்கொண்டு... அது என்ன பாவம் செய்தது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்?' என்றாய் என்னிடம்.
'அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். ஏன் என்றால் அவர்கள் பெண்கள். நீ இப்படித்தான் செய்வாய். ஏன் என்றால் நீ தேவதை!' என்றேன்.
'ச்சீ போடா' என்று என் கன்னம் தட்டினாய்.
நீ 'நட்சத்திரம் விழாது' என்றாய்.
'உண்மைதான் ஒரு நட்சத்திரம் எப்படிப்பட்டது என்று இன்னொரு நட்சத்திரத்திற்குத்தானே' தெரியும் என்றேன்.
அதற்கும் உதிர்த்தாய் அற்புதமாய் ஒரு 'ச்சீ போடா.'
நீ உதிர்க்கும் 'ச்சீ போடா' என்கிற அந்த வார்த்தைக்காகத்தான் நான் தினமும் காத்திருக்கிறேன். ஏனென்றால் நீ ஒவ்வொரு முறை அப்படிச் சொல்லும்போதும் என் உயிரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகிறாய்.

'நம்மை மீறி நாளை என்ன நடந்துவிடப் போகிறது'

ந்தியர்கள் பாசிட்டிவான எண்ணம் கொண்டவர்கள். எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும்! நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்' என்கிறது ஒரு சர்வே!

நல்ல விஷயம்தானே... இதை ஏன் கவலையோடு சொல்கிறீர்கள் என்கிறீர்களா..? அவர்கள் எடுத்த சர்வே எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பற்றி! இப்போது சொல்லுங்கள், இது கவலைக்குரிய விஷயமா இல்லையா!

ஏ.எக்ஸ்.ஏ. ஆசியா லைப் என்ற சர்வதேச இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் எட்டு ஆசிய நாடுகளிடையே அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாழ்க்கையைப் பற்றி சராசரியைவிட அதிகமாகச் சம்பாதிக்கும், செலவழிக்கும், படித்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றொரு சர்வேயை நடத்தியது. அதில்தான் இந்தியாவைப் பற்றி இப்படியரு அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் சேர்ந்து பார்தி ஏ.எக்ஸ்.ஏ லைப் இன்ஷ¨ரன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசியாவிலுள்ள இந்தியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய இடங்களில், 'வேலை, குடும்பம், உடல்நலம், ஓய்வுக்-காலம் ஆகியவற்றுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்' பற்றி 25 முதல் 50 வயது வரையானவர்களிடையே ஒரு சர்வே நடத்தப்-பட்டது.

'நம்மை மீறி நாளை என்ன நடந்துவிடப் போகிறது' என்ற மனோபாவத்தை பாசிட்டிவான எண்ணம் என்பதைவிட எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலில் பலவீனமாக இருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் இந்தியாவில் 82 சதவிகிதம் பேர் ஓய்வுக்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமல் இருப்பதாக சர்வே சொல்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதுவே பிலிப்பைன்ஸில் 78%, சீனாவில் 69% என்ற அளவில் இருக்கிறது.

ஓய்வுக்காலத்தில் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ஆசைமட்டும் இருக்கிறது. ஆனால், அதற்காக இப்போது வாழும் ஆடம்பர வாழ்க்கையில் சிறு தியாகம்கூடச் செய்து ஓய்வுக்-காலத்துக்காக ஒதுக்கி வைக்கத் தயாரில்லை என்ற மனநிலைதான் பெரும்பான்மையான ஆசியர்களிடம் இருக்கிறது என்ற வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறது இந்த சர்வே!

ஓய்வுக்காலம்தான் இப்படி என்-றால், உடல்நலம் சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதிலும் இந்தியர்கள் பெரிதாக ஆர்வம் காட்ட-வில்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்! வெறும் 7 சதவிகிதம் பேர்தான் ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, 21 சதவிகிதம் பேருக்கு ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் பற்றிய தெளிவு இருக்கிறது.

சர்வேயின் முடிவில் இந்தியர்கள் வேலைக்குத்தான் முதலிடம் கொடுப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. உடல்நலத்துக்கு இரண்டாம் இடமும், குடும்பத்துக்கு மூன்றாம் இடமும் ஓய்வுக்காலத்துக்கு கடைசி இடமும் கொடுத்திருக்கிறார்கள்.

இன்ஷ¨ரன்ஸில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி-யிருக்கிறது இந்த சர்வே. எதற்கு எந்த இடம் கொடுத்-திருக்கிறோம் என்பதல்ல... எல்லாவற்றுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இப்-போதைய தேவை!

நன்றி : விகடன்

செவ்வாய், 11 டிசம்பர், 2007

''பதறடிக்கும் 'ஃபாஸ்ட் புட்' பயங்கரம்!


''பதறடிக்கும் 'ஃபாஸ்ட் புட்' பயங்கரம்! ---- இயற்கையை மறந்தால் இதுதான் கதி!

ரொம்பத் தின்னா... குண்டாயிடுவ!

ஐ டோண்ட் கேர்!!

இப்படியரு விளம்பரத்தை அநேகமாக நம்மில் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.

விளம்பரம் சரி, நிஜ வாழ்க்கையில்....?

ரொம்பத் தின்னா... திண்டாடுவே... என்றாகி... வெரி வெரி கேர் என்ற நிலைமைக்குக் கொண்டு சென்றுவிடும் என்பதுதான் உண்மை. இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம்... பலருக்கும் தெரிந்த சொர்கபுரியாக!! இருக்கும் அமெரிக்காவே போதும்!

இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 37% அமெரிக்கர்கள் உடல் பருமன் நோய் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளும், நடுத்தர வயதினரும் தங்களது உடலில் அளவுக்கு அதிகமான சதை, வீங்கிப்போன தொப்பை ஆகியவற்றோடு தினசரி போராடிக்கொண்டுள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 15% குழந்தைகள் அதிக உடல் எடையுடன் உள்ளன. அதில் 6% குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை.

இந்தப் பிரச்னைக்கெல்லாம் முக்கிய காரணம்... இயற்கையை மறந்து, நாம் வெகுதூரம் பயணிக்க ஆரம்பித்ததுதான். இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களை உண்டு வாழ்ந்த மனிதன், நெருப்பைக் கண்டுபிடித்த பிறகு, வேக வைத்து தின்னும் பழக்கத்துக்கு மாறினான். அதுவே கொஞ்சம்போல பாதிப்புதான்... என்றாலும், பெரிய அளவில் பாதித்துவிடவில்லை. ஆனால், காலப்போக்கில்... அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகத்தில் காசு பார்க்கும் வெறியோடு கண்டதையும் கண்டுபிடித்ததன் விளைவு... இன்றைக்கு பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து மனித இனத்தை ஆட்டிப்பார்க்கிறது.

எல்லாமே ரெடிமேட் என்றாகிவிட்ட இந்த காலகட்டத்தில் சிப்ஸ், பர்கர், சாண்ட்விச், பிரெஞ்ச் ஃபிரை இத்யாதி இத்யாதி வகையிலான துரித உணவுகள்(ஃபாஸ்ட் ஃபுட்) மூலைமுடுக் குகளிலெல்லாம் கூட கிடைக்கின்றன. இவற்றைக் கணக்கு வழக்கில்லாது உண்பதுதான் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணம் என்கின்றன ஆய்வுகள்!

இதன் காரணமாக ரத்த அழுத்தம், இதயநோய் என்று பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்தபோதிலும், அமெரிக்கர் களின் ஃபாஸ்ட் ஃபுட் மோகம் குறைந்தபாடில்லை. அந்த நாட்டைக் காப்பியடிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலும் அதேபோன்றதொரு உணவுக் கலாசாரம் வேகவேமாகப் பரவிக் கொண்டிருப்பது வேதனையூட்டும் செய்தி.

ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விற்பதற் காக உலகம் முழுவதும் செய்யப்படும் விளம்பரச் செலவு எவ்வளவு தெரியுமா? 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ருபாய்! விளம்பரத்துக்கே இத்தனை ஆயிரம் கோடிகள் என்றால்... விற்பனை லாபம்...? அம்மாடியோவ்!

கஷ்டப்பட்டு தலையில் சுமந்து வீட்டின் வாசல் வரை வரும் கீரைக்கார பெண்மணியிடம் பல மணி நேரம் பேரம் பேசுகிறார்கள். இத்தனைக்கும் அவர் கொண்டு வருவது அத்தனையும் இயற்கைத் தங்கம். அவருக்குக் கொடுக்கும் காசு, நாலு விவசாயிகளையும் சேர்த்து வாழவைக்கும். ஆனால், கண்ணாடிக் கூண்டுக்குள் ஜிலுஜிலுவென உட்கார வைத்து பரிமாறப்படும் செயற்கைப் பண்டங்கள் யானை விலை, குதிரை விலையாக இருந்தாலும் வாங்கித் தின்றுவிட்டு, பில் தொகைக்கும் மேலாக கூடுதலாக பத்து, இருபது, நூறு என்று அள்ளிக் கொடுத்துவிட்டு வருகிறார்கள். அதுதான் இந்த மாயா உலகத்தின் நவநாகரிக விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாயையை உடைத்தெறிந்து, மக்களை ஃபாஸ்ட் ஃபுட் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று யாருக்குமே தோன்ற வில்லையா...?

எத்தனையோ பேர் பலப்பல சமயங்களில் இதைப்பற்றி சிந்தித் துள்ளனர். ஆனால், அமெரிக்கா வின் மேற்கு வர்ஜினியாவைச் சேர்ந்த மார்கன் ஸ்பர்லாக் என்ற திரைப்பட இயக்குனர் எடுத்த முயற்சி முற்றிலும் வித்தியாசமானது என்பது மட்டுமல்ல வில்லங்கமானதும் கூட!

மார்கன் ஸ்பர்லாக் செய்ததெல்லாம் தினசரி 3 வேளை உலகின் மிகப்பெரிய ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமான மெக்டொனால்ட் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களை மட்டுமே ஒரு மாதத்துக்கு உணவாகக் கொண்டதுதான். எந்தவித உடற்பயிற்சியும் அவர் செய்யவில்லை. இப்படி உண்பதையும், அதனால் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் ஒளிப்பதிவாளர் ஸ்காட்டை வைத்து படமாக்கினார். உடலை அவ்வப்போது பரிசோதித்து அறிக்கை அளிக்க 3 டாக்டர்களையும் நியமித்துக் கொண்டார். அமெரிக்காவில் உள்ள 20 நகரங்களுக்கு பயணம் செய்து நூற்றுக்கணக்கானோரிடம் இதுபற்றிப் பேசினார், பேட்டிகள் எடுத்தார்.

இந்த முயற்சிக்கு வெற்றி (?) கிடைக்கத் தொடங்கியது. 3&வது வாரத்திலேயே ஸ்பார்லாக்கின் உடல்நிலை ஆட்டம் கொடுத்தது. ஏதோ கொஞ்சூண்டு உடல் பெருக்கும், கொஞ்சம் பி.பி. அதிகரிக்கும் அவ்வளவுதானே, பார்த்துக்கலாம் என எண்ணியிருந்த அவருடைய டாக்டர்களுக்கும் கூட கிலி பிடித்துக் கொண்டது. காரணம், 25 நாட்களுக்குள்ளாகவே மார்கனின் உடல் எடை 11 கிலோ கூடியது; மூச்சு விட சிரமப்பட்டார்; கல்லீரல் கடுமையாக பாதிக்கப் பட்டது; இதயத்துடிப்பு தாறுமாறானது; கொலஸ்ட்ரால் 10 புள்ளிகள் எகிறியது. பயந்து போன ஸ்பர்லாக்கின் நண்பர்களும், டாக்டர்களும் விஷப்பரீட்சை வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஆனால், முன்வைத்த காலை பின் வைக்கமால் திட்டமிட்ட படி 30 நாட்களும் படப்பிடிப்பை நடத்தி முடித்தார். படத்துக்கு ஸ்பர்லாக் வைத்த பெயர். சூப்பர் சைஸ் மீ (Super Size Me).

ஃபாஸ்ட் ஃபுட், மனிதனுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் எப்படி இருக்கும் என்பதை ஊருக்குச் சொல்ல, தன்னையே பணயம் வைத்து எடுத்த ஆவணப்படத்தை ஸ்பர்லாக் வெளியிட்டபோது தான் அமெரிக்க மக்களுக்குக் கொஞ்சம் உரைக்கத் தொடங்கியது. (ஆடிப்போன மெக்டொனால்ட் நிறு வனம், இந்தப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை மாற்று வதற்காக மட்டுமே பல கோடி டாலர்களை அள்ளி இறைத்து விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது).

சரி... இந்த தகவலெல்லாம் நமக்கெதற்கு? அதெல் லாம் அமெரிக்காவுக்குத்தானே என்று நம்மில் சிலர் எண்ணலாம். ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் வீதிக்கு வீதி கால் பதித்துவரும் ஃபாஸ்ட் ஃபுட், மற்றும் பீட்சா கார்னர்கள் நம் வீட்டுக் குழந்தைகளையும், பள்ளி மாணவ &மாணவிகளையும் தங்களது வளையத்துக்குள் கொண்டுவரத்தொடங்கி நாளாகிவிட்டன.

கால்சென்டர், பீ.பி.ஓ., நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோருக்கு பெரும்பாலும் அந்த நிறுவனங்களின் கேன்டீன்களில் சாப்பிடக் கிடைப்பது அல்லது தரப்படுவது இத்தகைய ஃபாஸ்ட் ஃபுட்கள் தான். கல்லூரிகளுக்கு (குறிப்பாக பெண்கள் கல்லூரி) அருகில் உள்ள பீட்சா கார்னர்களிலும், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளிலும் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலே எத்தனை இளசுகள் இதனை விரும்பிச் சாப்பிடுகின்றன என்பதுடன், பெரும்பாலானோர் மதிய உணவாகவே இவற்றைத்தான் உண்கின்றனர் என்பதைப் பார்க்கமுடிகிறது.

வெளிநாட்டு நாகரிகங்களை பின்பற்றும் பணக்கார குடும்பங்கள் மட்டுமல்லாமல், அவர்களைப் பார்த்து தங்களின் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டே இருக்கும் நடுத்தர குடும்பத்தினரும் இத்தகையக் கடைகளை மொய்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உடல் -பருத்த இளசு களும், சிறுவர், சிறுமிகளும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால்...? என விக்கிரமாதித்தன் கதைகளில் கடைசியில் வருவதைப்போல, உண்மையைச் சொல்லப்போனால் நுற்றுக்கணக்கான ருபாய் செலவு செய்து ஒரு பீட்சாவையோ, பர்கரையோ, பன்னாட்டு குளிர் பானங்களையோ... மணிக்கணக்கில் சாவகாசமாக உட்கார்ந்து தின்று, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைவிட, குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல காய்கறிகளை வாங்கி, உணவில் சேர்த்து உண்ணப் பழகிக்கொண்டால் மருத்துவச் செலவும் மிச்சம், கடைசிமுச்சுவரை யாருக்கும் தொல்லை தராமல் நிம்மதியாக வாழலாம்.

நன்றி : விகடன்

வியாழன், 22 நவம்பர், 2007

அமெரிக்காவில் அறிமுகமான இ - புக் ரீடர்



அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான்.காம், இ - புக் ரீடரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 400 டாலர் ( சுமார் ரூ.15,600 ) விலையில் விற்கப்படும் இந்த\ இ - புக் மூலமாக, புத்தகங்கள், வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளை எலக்ட்ரானிக் பேப்பர்களாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


நன்றி : தினமலர்

வெள்ளி, 16 நவம்பர், 2007

சொத்து வாங்கும் முன்...

ஒரிஜினல் டாகுமென்ட், தாய் பத்திரம் எங்கே, யாரிடம் இருக்கிறது என்று கேட்டு வாங்கிப் பார்ப்பது அவசியம்.

கடந்த 30 வருடமாக சொத்து யார் யார் பெயரில் இருந்து வருகிறது என்பதை வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்-டும்.

கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து மனை மற்றும் சொத்து விஷயத்தில் தாலூகா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து விவரங்களை கேட்க வேண்டும். அவரிடம் ஃபீல்ட் மேப் (Field Map) கேட்டு வாங்க வேண்டும். அதில், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய சொத்து எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து சர்வேயர் வைத்து மனை அல்லது வீட்டை அளக்க வேண்டும். ஃபீல்டை அளக்கும்போதே, அதில் பிரச்னை ஏதாவது இருந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், விஷயங்களைக் கக்கிவிடுவார்கள்.

அ&பதிவேடு (A - Register) வாங்கிப் பார்க்க வேண்டும். இதை நிலத்தின் ஜாதகம் என்று சொல்லலாம். அதில், சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம், உரிமை-யாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும். சொத்தை வாங்குபவர், தன் பெயரில் புதிதாக வாங்கினால், அந்த விவரம் அ&பதிவேட்டில் இடம் பெறும்.

நகரம் என்கிறபோது, தாலூகா அலுவலகத்தில் நிரந்தர நிலப் பதிவேடு (Permanent Land Register) இருக்கும். இதில், சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்--தால் கதவு எண், உரிமையாளர் பெயர், சொத்தின் நான்கு எல்லை, சொத்தின் அளவீடுகள் போன்ற விவ-ரங்கள் இருக்கும். பிளான் மற்றும் பில்டிங் அப்ரூ-வல், கடைசியாக சொத்துவரி கட்டியதற்கான ரசீது போன்ற வற்றை வாங்க வேண்டும். இந்த ஆவணங்-களை வக்கீல் ஒருவரிடம் கொடுத்தால், அவர் லீகல் ஒப்பீனி யன் தருவார். அதை வைத்து முடிவு செய்ய-லாம்.

பவர் பத்திரம்!

பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்தை வாங்கும்-போது, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுப் பார்க்க வேண்டும். 2, 3 வருட பழைய பவர் என்றால், உரிமையாளர் உயிருடன் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உயிருடன் இருந்தால்தான் பவர் செல்லும்.

ஓனரிடமிருந்து, ‘பவர் இப்போதும் செல்லும்’ என்று வக்கீல் மூலம் பிரமாணப் பத்திரம் (Affidavit) வாங்கிக் கொடுக்கச் சொல்ல வேண்டும். உரிமையாளர் மூலம் சொத்தை வாங்குவது பல வகையில் நல்லது.

பத்திரிகை விளம்பரம்!

ஆவணத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால், உரிமையாளர் அனுமதியுடன் முன்னணி பத்திரிகைகளில், ‘இந்தச் சொத்தை வாங்கப் போகிறேன். இதில் வில்லங்கம், ஆட்சேபணை ஏதாவது இருந்தால் 15 தினங்களுக்குள் தெரிவிக்கவும்’ என்று விளம்பரம் கொடுப்பது நல்லது.

மோசடியாக கிராமமே விற்பனை!

சென்னை புறநகரான தாம்பரம் அருகே கஸ்பாபுரம் என்ற ஊரையே மூன்று பெண்கள், புரமோட்டர் ஒருவருக்கு தங்களின் பூர்வீக ஜமீன் சொத்து என்று சொல்லி விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 80 குடும்பங்கள் வசித்த 282 ஏக்கரை 4 சர்வே எண்களில் விற்றுள்ளனர்.


இதில், 65 ஏக்கரை புரமோட்டர் பிளாட் போட்டு விற்றுவிட்டார். நிலத்தை வாங்கியவர்கள் கிராம மக்களை காலி செய்யச் சொல்ல... அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட கலெக்டரிடம் முறையிட, மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்-ளனர்.

அனைத்துக்கும் ஒரே எண்!

உள்ளாட்சி அமைப்பு கொடுக்கும் கதவு எண், வருவாய் துறையின் வழங்கும் பட்டா எண், பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுக்கும் பதிவு எண், நிலத்தின் சர்வே எண் இந்த நான்கும் ஒரே எண்ணாக இருந்தால் ஒரு சொத்து எங்கே இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதோடு, மோசடிகளைத் தடுக்கவும் முடியும் என்பது ஆவண மோசடியால் பாதிக்கப்பட்ட பலருடைய கருத்தாக இருக்கிறது.

நன்றி : நாணயவிகடன்

தொழில் கொள்கை

‘இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்’’ என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு தனது தொழில் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. 2011&ம் ஆண்டுவாக்கில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாகக் கூறியுள்ள அந்த அறிக்கை, தமிழ்நாட்டின் ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. தொழில் துறையினரும் மாநில நிர்வாகமும் கலந்து ஆலோ சித்து அவ்வப்போது கொள்கை முடிவுகளை எடுத்திட ஏதுவாக முதல்வர் தலைமையில் சிறப்புப்பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தொழில் கொள்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள தொழில் கொள்கை, தொழில்துறையின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்திய தொழில் நிலுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. இதை வரவேற்றிருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது பற்றிய அணுகுமுறை மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது, விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு முன்வரும் தனியார் நிறுவனத்தினர், நேரடியாக விவசாயிகளிடம் நிலங்களை வாங்கிக் கொள்ளவேண்டும். அவை பெரும்பாலும் தரிசு நிலங்களாகவோ, புன்செய் நிலங்களாகவோ இருப்பது நல்லது. தொழில் பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக வாங்கப்படும் நிலத்தில் பத்து சதவிகிதத்துக்கு மேல் நன்செய் நிலம் இருந்தால், அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ‘தொழில் கொள்கை’ திட்ட வட்டமாகக் கூறுகிறது.

பத்தாயிரம் ஏக்கர் கொண்ட ‘நிலவங்கி’ ஒன்றை ஏற்படுத்தவும் அந்த நிலங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய தொழில் பூங்காக் களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘சிப்காட்’ மற்றும் ‘டிட்கோ’ முதலிய அரசு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்படும் தொழில் பூங்காக்களில் பத்து சதவிகித இடம் பள்ளிகள், மருத்துவமனைகள்,


குடியிருப்புகள் முதலான சமூகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊக்கத் தொகைகளும், தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருவோருக்குச் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில் கொள்கையில் இடம் பெற்றுள்ள இரண்டு அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதத்தில் முக்கியமான சில சலுகைகளைத் தொழில் கொள்கையில் அறிவித்துள்ளனர். உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கினால், அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு நுழைவு வரியிலிருந்தும் மதிப்புக் கூட்டு வரியிலிருந்தும் முழுமை யாக விலக்கு அளிக்கப்படும்.

தனி நபர்களோ நிறுவனங்களோ தமது கண்டுபிடிப்புக் காகக் காப்புரிமை (Patent) பெறுவதற்கு ஆகும் செலவில் ஐம்பது சதவிகிதம் அல்லது இரண்டு லட்ச ரூபாய் இதில் எது குறைவோ அதனை அரசே ஏற்கும் என தொழில் கொள்கையில் கூறியுள்ளனர்.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண விவசாயிகள்கூட இப்போது பல்வேறு புதிய கண்டுபிடிப்பு களைச் செய்கின்றனர். மகராஷ்டிராவில் அப்படியரு விவசாயி கண்டுபிடித்த ஹெச்.எம்.டி. என்ற நெல் ரகம், இப்போது பல மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. அதற்கான காப்புரிமையை அவர் பெறாத காரணத்தால், அதனால் வரும் லாபத்தை இப்போது மற்றவர்கள் அனுபவிக்கின்றனர். காப்புரிமை பெறுவதற்கான தொகையில் சலுகை வழங்குவது நல்லதுதான். இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகளில் விவசாயத்துறை சார்ந்த வற்றுக்கும், பெரும்பாலான மக்களுக்குப் பயன்படக் கூடியவற்றுக்கும் காப்புரிமை பெறுவதற்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிப்பதால் ஏற்படும் இழப்பைவிட இதற்குக் கூடுதலாக செலவாகி விடாது. அதுமட்டுமின்றி, இத்தகைய கண்டுபிடிப்புகள் வணிகரீதியில் வெற்றி பெற்றால் அதனால் நமது மாநிலம்தான் லாபம் அடை யும். எனவே, தமிழக முதல்வர் இதனைப் பரிசீலிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்படும் எனத் தொழில் கொள் கையில் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆர்வமுள்ள மாணவர்களைத் தெரிவு செய்து தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்கச் செய்வது, அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக ரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்துவது எனக் குறிப்பான திட்டங்களை அரசு அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சிமென்ட் தொழிற்சாலைகள் ‘ஃப்ளை ஆஷை’ப் (திறீஹ் கிsலீ) பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தொழில் கொள்கையில் கூறியுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சிமென்ட் விலை ஏற்றத்தால் கட்டுமானத் தொழிலே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஃப்ளை ஆஷைப் பயன்படுத்தும் இந்த யோசனை முக்கியமானதாகும். ஆனால், இதுவும் பொத்தாம் பொதுவில்தான் கூறப்பட்டுள்ளது. அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் ஃப்ளை ஆஷ் பயன்பாட்டை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளைப் பல மாநில அரசுகள் எடுத்துள்ளன.

ஒரிசா மாநில அரசு தன் மாநிலத்தில் அனல் மின்நிலையம் உள்ள பகுதிகளில் எழுபது கிலோமீட்டர் சுற்றளவில் செங்கல் சூளைகளைத் தடை செய்துள்ளது. ஃப்ளை ஆஷைப் பயன்படுத்தித்தான் அங்கு கட்டுமானப் பயன்பாட்டுக்கான கற்களை உற்பத்தி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பொதுப்பணித் துறையால் கட்டப்படும் அனைத்து மேம்பாலங்களுக்கும் ஃப்ளை ஆஷால் தயாரிக்கப்படும் கற்களைத்தான் பயன் படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஃப்ளை ஆஷை இலவசமாக வழங்குகிறது. ஆனால், அதை வாங்குவதற்குத்தான் ஆளில்லை. மக்களிடம் இன்னும் செங்கல்லால் வீடுகட்ட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதால் ஃப்ளை ஆஷால் தயாரிக்கப் படும் கற்களை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, அதை ஊக்குவிக்க, ‘பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமான நடவடிக் கைகளிலும் ஃப்ளை ஆஷால் தயாரித்த கற்களையே பயன்படுத்த வேண்டும்’ எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது எண்ணூர், செய்யூர், கடலூர் எனப் பல்வேறு இடங்களில் புதிய அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. அந்தத் திட்டங்களை எதிர்க்கும் அந்தப் பகுதி பொதுமக்கள் ஃப்ளை ஆஷைப் போட்டுவைக்கும் சாம்பல் குழிகளால் தங்களுக்கு சுகாதாரக்கேடு வருமென அஞ்சுகிறார்கள். அவர்களது அச்சத்தைப் போக்கிட ஏதுவாக ஃப்ளை ஆஷை சேமித்து வைக்காமல், அதைக்கொண்டு கற்கள் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் சிலவற்றை அறிவிப்பதும் பயன்தரும்.

தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் உற்பத்தியாகிறது. அதில் ஐந்து சதவிகிதம்கூடப் பயன்படுத்தப்படவில்லை. அரசு கட்டித்தரும் தொகுப்பு வீடுகளுக்கு ஃப்ளை ஆஷ் கற்களைப் பயன்படுத்தினால், கட்டுமான செலவு நிச்சயம் குறையும். இப்போது சரியாக வேகாத செங்கற்களைக் கொண்டு மிகக் குறைவான சிமென்ட்டைப் பயன்படுத்திக் கட்டப்படுவதால் அந்தத் தொகுப்பு வீடுகள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே சரிந்து விடுகின்றன.

திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி குறித்துத் தொழில் கொள்கையில் நிறையவே கூறியுள்ளனர். இதற்காக மாநில அளவில் ‘மனித வள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புக் குழு’ அமைக்கப்பட்டு, அதன்மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டு மெனக் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நான் கோரிக்கை விடுத்தபோது, ‘தொழில் கொள்கையில் அது உள்ளடக்கப்படும்’ என முதல்வர் அறிவித்திருந்தார். அவர் கூறியபடியே அதற்கான திட்டம் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. உயர்நிலைப்பள்ளி மட்டத்திலேயே பாடத்திட்டத்தில் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுமென அறிவித்துள்ளனர். இதற்காக சி.ஐ.ஐ&யின் ஒத்துழைப்போடு விரி வான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுத் தமிழக அரசிடம் ஏற்கெனவே வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து சி.ஐ.ஐ. எதையும் குறிப்பிடவில்லை. தமிழக அரசு செலவு செய்து ஆட்களைப் பயிற்றுவித்துத் தந்தால் அவர்களிலிருந்து தமக்குத் தேவையானவர்களைத் தொழில் நிறுவனங்கள் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் என்பதாகவே அந்தத் திட்டம் உள்ளது. தொழில் நிறுவனங் களுக்கு எந்தப் பொறுப்பையும் அளிக்காமல் அரசாங்கத்துக்கு மாத்திரம் கடமைகளை வரையறுத்துள்ள அந்தத் திட்டத்தின் அணுகுமுறை சரியான தல்ல. அதை மாற்றி தொழில் நிறுவனங்களும் அரசும்சேர்ந்து அந்தத் திட் டத்தை செயல்படுத்தி னால், நிச்சய மாகப் பெரிய மாற் றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான குறிப்பான திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும்.

2011 ஆண்டுக்குள் இருபது லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அரசின் அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது எனத் தெரியவில்லை. வேலை வாய்ப் புகளை ‘ஒருங்கு திரட்டப் பட்ட பிரிவு’ (ளிக்ஷீரீணீஸீவீsமீபீ ஷிமீநீtஷீக்ஷீ) ‘ஒருங்கு திரட்டப்படாத பிரிவு’ (ஹிஸீ ளிக்ஷீரீணீஸீவீsமீபீ ஷிமீநீtஷீக்ஷீ) என இரண்டாகப் பிரித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் யாவும் ஒருங்கு திரட்டப்பட்ட பிரிவுக்குள்தான் வரும். தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தாறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 2005&2006&ம் ஆண்டில் சுமார் பதினாறாயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டது. கடந்த ஆட்சியில் இருந்த வேலை நியமனத்தடை ரத்து செய்யப்பட்டு, இப்போது பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. எனவே, கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் பேர் வரை வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை ஐம்பது லட்சம் பேர். இதை ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு மிகவும் சொற்பமானதுதான் என்பது புரியும். இந்தச் சூழலில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை அரசு எப்படி உருவாக்கப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறிதான்! ஒருங்கு திரட்டப்படாத விவசாயம் உள்ளிட்ட துறைகளையும் உள்ள டக்கித்தான் இந்த வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளதா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. தற்போது அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட அனைத்து வாரியங்களிலும் பதிவு செய்து கொண்டிருப்போரையும் கணக்கிட்டால்கூட இந்த இலக்கை எட்டுவதுகடினம்தான்.

தமிழ்நாட்டில் தற்போது துவக்கப்படுகின்ற பெரிய பெரிய திட்டங்களில்கூட நேரடியாக வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டுவதில்லை. எனவே, அரசின் இந்த அறிவிப்பு வெறும் கவர்ச்சி தானோ என்ற ஐயத்தை சில அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. இதைத் தெளிவுபடுத்த வேண் டியது அரசின் கடமை.

தொழில் துறையினரின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சேர்க்கப்படும் எனவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றவும் முன்வருகின்ற தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதலாக சலுகைகள் அளிக்கப்படும் என்றும் ‘தொழில் கொள்கை’ கூறுகிறது. இவை வரவேற்கக்கூடிய அம்சங்களாகும். ஆனால், இத்தகைய சலுகைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப்பின் இப்படி யான, அரசின் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட வேண்டும்.

தொழில் தொடங்குவதற்காக முன்வரும் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவற்றுக்கும், அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிப் பதற்குத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இடமில்லையென்ற நிலை உருவாகிவிடும். அந்த நிலைமை வராமல் காக்கவேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை தமிழினத் தலைவரான முதல்வர் கலைஞருக்கு உள்ளது!

நன்றி :ஜு.வி